புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார்.
வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ரவிசங்கர் அவருக்கு மறுமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். மேலும், தான் பணிபுரியும் அதே நிறுவனத்தில் 35 வயதுள்ள பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரிடம் காண்பித்து செல்போன் நம்பரையும் கொடுத்து இருக்கிறார் ரவிசங்கர்.
அதன் பின்னர் வாட்ஸ்அப் என இணைய வலைதளங்கள் மூலமாக இருவரும் அவர்களது தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் இருவரும் சேர்ந்து மறுமணம் செய்ய முடிவு செய்த நிலையில், திருமணம் செய்ய செலவுக்கு ரூ.9 லட்சம் வரை தேவைப்படும் என அந்த பெண் கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பிய வேணு, கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கூகுள் பே மற்றும் வங்கிக் கணக்கு வாயிலாக ரூ.9 லட்சம் அனுப்பியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் திருமணத்திற்காக வேணு வாங்கி வைத்திருந்த தாலிசரடு (ரூ.3 லட்சம் மதிப்பு) ரவிசங்கரிடம் கொடுத்து அனுப்ப சொல்லி செல்போனில் கூறிய நிலையில் ரவிசங்கரிடம் நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து, முதல்மாடியில் குடி இருந்த ரவிசங்கர் தலைமறைவாகி உள்ளார். அவரது செல்போனை தொடர்பு கொள்ளவே சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.சாட்டிங் செய்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டுள்ள போது, தொடர்பில் இல்லை என வரவே வேணு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனவே சாட்டிங்கில் தன்னுடன் ஈடுபட்டது பெண்தானா? என்ற சந்தேகத்தில் ஒதியஞ்சாலை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரவிசங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். மேலும் ஒரு திடுக்கிடும் தகவல்களாக ரவிசங்கர் திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெறிய வந்ததுள்ளது. இவர் ஏற்கனவே மோசடி வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.