விமான பணியாளர்களின் பணி நேரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க தேவையான அளவுக்கு விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் இல்லாததால், கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டு விமானங்களுடன் சேர்த்து பன்னாட்டு விமான சேவைகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத் தடைகளால் கடும் அவதியை எதிர்கொண்டனர்.
பல விமான நிலையங்களில் இண்டிகோ பணியாளர்களுடன் பயணிகள் வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டு கவனம் ஈர்த்தது. நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான சேவை பாதிப்பு படிப்படியாக சரியாகும் என்றும், அதுவரை விமான பணியாளர்களுக்கான பணி நேரக் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் விமான அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்குள் சேவைகள் முழுமையாக சரியாகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, சென்னையில் 6வது நாளாகவும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மாற்றாக மற்ற விமான நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்பட்டபோது, டிக்கெட் விலைகள் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



