வெள்ளை மாளிகையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், டொனால்ட் டிரம்ப் தன்னைக் குறிவைத்து தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது, “என்னை ஏன் தொடர்ந்து குறிவைக்கிறார்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள் தான் பொதுவாக குறிவைக்கப்படுகிறார்கள்” என்று கூறினார். இதை விளக்குவதற்காக, ஆபிரகாம் லிங்கன் போன்ற வரலாற்று தலைவர்களையும் அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். “நான் நிறைய செய்திருக்கிறேன், இந்த நாட்டை மாற்றியிருக்கிறோம். ஆனால் அதனால் மகிழ்ச்சியடையாதவர்களும் இருக்கிறார்கள். அதுவே இதற்கான காரணம்” என அவர் தெரிவித்தார்.
2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த கொலை முயற்சியிலிருந்து தப்பிய அனுபவத்தையும் நினைவுகூர்ந்த டிரம்ப், “இது ஆபத்தான வாழ்க்கை என்றாலும், நான் இன்னும் இயல்பான வாழ்க்கையைத்தான் வாழ்கிறேன்” என்று கூறினார். மேலும், “பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறுவதை நாம் கேட்கிறோம். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், பத்திரிகைகள் குறித்து தனது அணுகுமுறையிலும் டிரம்ப் சற்று மாறுபட்ட கருத்தை வெளியிட்டார். முன்பு ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்த அவர், தற்போது “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அளவற்ற அன்பும் ஒற்றுமையும் வெளிப்பட்டுள்ளது” என்று கூறி, நிதானமான தொனியில் பேசியது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில், இந்த பாதுகாப்பு மீறல் சம்பவம், நிகழ்ச்சி நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டல் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த இடம் “மிகவும் பாதுகாப்பானதாக இல்லை” என்று டிரம்ப் குறிப்பிட்டதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்த புதிய வசதிகள் அவசியம் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, வெள்ளை மாளிகையில் கட்டப்பட்டுவரும் சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நடன மண்டபம் குறித்து அவர் பேசினார். இது உயர் பாதுகாப்பு அம்சங்களுடன், ட்ரோன் தாக்குதல்களையும் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய பாதுகாப்பு சவால்களை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
Read more: வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு.. உயிர் தப்பிய டிரம்ப்..! மோடி ட்வீட் வைரல்!