ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. குறிப்பாக காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் “புண்டிபுக்யோ” வகை எபோலா வைரஸ் குறித்து உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.
மே 17ஆம் தேதி, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR 2005) கீழ் இந்த அறிவிப்பை WHO வெளியிட்டது. இதையடுத்து, ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் (Africa CDC) இந்த நோய்ப் பரவலை கண்ட அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்தியுள்ளது.
எபோலா என்றால் என்ன? எபோலா என்பது மிகக் கடுமையான வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல் நோயாகும். இது உடலின் பல உறுப்புகளை பாதித்து, கடுமையான உடல் பலவீனம், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உட்புற மற்றும் வெளிப்புற ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நோயின் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது பரவி வரும் “புண்டிபுக்யோ” வகை எபோலாவுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இன்னும் இல்லை என்பதும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
WHO வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை: மே 22ஆம் தேதி WHO அவசரக்குழு வெளியிட்ட பரிந்துரைகளில், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எல்லை நுழைவுப் பகுதிகளில் கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எபோலா பாதிப்பு பதிவான பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு காரணம் தெரியாத காய்ச்சல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும் என WHO தெரிவித்துள்ளது. மேலும், வைரஸ் பரவியுள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன? காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தெற்கு சூடான் அதிக ஆபத்தான அண்டை நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலைமை என்ன? இந்தியாவில் இதுவரை புண்டிபுக்யோ வகை எபோலா தொற்று எதுவும் பதிவாகவில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், தற்போது அந்த நாடுகளில் வசித்து வரும் அல்லது பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள், அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read more: ஜப்பானியர்களின் 3-3 நடைப்பயிற்சி விதி.. சர்க்கரை, பிபி, உடல் எடை அனைத்தையும் கட்டுப்படுத்துமாம்..!