வைணவ பக்தர்களின் ஆகச்சிறந்த ஆன்மீக கனவு என்பது, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிப்பதாகும். 105 திருத்தலங்கள் பாரத தேசத்திலும், ஒன்று நேபாளத்திலும், மீதமுள்ள இரண்டு விண் உலகிலும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கால மாற்றத்தாலும், உடல்நிலை மற்றும் பொருளாதாரச் சூழல்களாலும் அனைத்துத் தலங்களுக்கும் நேரில் செல்வது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்தப் பெருங்கனவை நனவாக்கும் ஒரு உன்னத தலமாகச் செங்கல்பட்டு அருகே உள்ள திருவடிசூலம் உருவெடுத்துள்ளது.
செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், பசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது திருவடிசூலம் கிராமம். இங்கு ஏழு மலைகளுக்கு நடுவே சுயம்புவாகத் தோன்றிய தேவி கருமாரியம்மன் திருத்தலம் மிகவும் பிரபலம். தற்போது அங்கு அம்மனுக்குப் பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதே வளாகத்திற்குள் இந்தியாவிலேயே முதன்முறையாக 108 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் எழுந்தருளியிருப்பது ஆன்மீக உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் மூலவர் எந்த கோலத்தில் (நின்ற, அமர்ந்த, கிடந்த) பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாரோ, அதே தத்ரூப வடிவத்தில் இங்கும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நிலவுலகில் உள்ள 106 தலங்களும் சிலை வடிவில் அருள்பாலிக்க, 107-வது தலமான பாற்கடல் ஓவியமாகவும், 108-வது தலமான வைகுண்டம் வானுலகத் தலமாகவும் இங்கே போற்றப்படுகிறது. குறிப்பாக, திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்குள்ள வேங்கடேச பெருமாளைத் தரிசித்தால், சாட்சாத் ஏழுமலையானையே நேரில் கண்ட திருப்தி கிடைப்பதாகப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
ஆலய கட்டுமானப் பணியின் போது, பூமிக்கடியில் இருந்து திருமாலுக்கு உகந்த ‘திருமண்’ பாறைகள் கண்டெடுக்கப்பட்டது, இந்தத் தலத்தின் தெய்வீகத் தன்மைக்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து, 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் வலம் வந்து வழிபடுகின்றனர். செங்கல்பட்டிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாத முதியோர்களுக்கும், ஆன்மீக தேடல் கொண்ட இளைய தலைமுறையினருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.



