ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டி ஒருவரின் வெள்ளி மோதிரங்களைத் திருட கொள்ளையர்கள் அவரது கால்களை வெட்டிச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 108 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில், வசித்து வந்தார். இந்நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், ”மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, மூதாட்டியின் காலை, ஒரு கும்பல் வெட்டிச் சென்றுள்ளது. இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எனது மருமகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது தாயார் ஆபத்தான நிலையில் வீட்டிற்கு வெளியே காணப்பட்டதாக அவர் கூறினார். மூதாட்டியின் கழுத்தில் காயங்கள் இருந்தன மற்றும் அவரது கால் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆகவே, கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதனை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு 108 வயது. மேலும் அவர் அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்தார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.