11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அறிக்கை தாக்கலாகுமா? என கேள்வி எழுந்திருக்கிறது
நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காவல்துறை, பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால், அதையும் மீறி ஆர்சிபி நிர்வாகம் ஊர்வலத்தை நடத்தியது. அப்போது, அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என சொல்லப்படுகிறது. வெறும் 35 ஆயிரம் பேர் கூடும் இடத்திற்கு லட்சக்கணக்கானோர் குவிந்தனர். மைதானம் மற்றும் மைதானத்துக்கு வெளியே என மொத்தம் 3 லட்சம் பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.காமேஷ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்க முன்னர் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “ஏற்கெனவே அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு இருந்தது. ஆனால் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் என்ன? நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்கிறீர்களா?” எனக் கடுமையாக கேள்வி எழுப்பினர்.
மாநில அரசு சார்பில் ஆஜராகிய தலைமை அரசு வழக்கறிஞர் சஷிகிரன் ஷெட்டி, “இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைகேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கையை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய ஆணையம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை வரும்” என பதிலளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “நாங்கள் நேரடியாக உத்தரவு பிறப்பித்தோம். அதையும் மீறி அறிக்கை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்தீர்கள். இதை அறிக்கையை மறுக்கும் செயல் என எண்ண வேண்டியதுதானா?” எனக் கடுமையாக விமர்சித்தனர். அதன்பின்னர், அறிக்கையை இன்று (ஜூன் 12) சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் எழுப்பிய 9 முக்கிய கேள்விகள்:
1. வெற்றிக் கொண்டாட்டம் நடத்த யார், எப்போது முடிவு செய்தனர்? எந்த முறையில் முடிவு செய்யப்பட்டது?
2. போக்குவரத்து ஒழுங்கை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
3. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
4. சம்பவ இடத்தில் மருத்துவ வசதி இருந்ததா?
5. நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடியோர் எண்ணிக்கை பற்றி முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததா?
6. நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டதா? இல்லையெனில் ஏன் வழங்கப்படவில்லை?
7. காயமடைந்தவர்கள் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்?
8. 50,000க்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பொதுவான செயல்பாட்டு வழிமுறை உள்ளதா?
9. நிகழ்ச்சிக்கான அனுமதி கோரப்பட்டதா? யாரால் கோரப்பட்டது?
Read more: செக்…! நில அபகரிப்பு செய்வதை தடுக்க புதிய முறை…! தமிழக அரசு அதிரடி