சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஜனவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து ஆறு நக்ஸலைட்டுகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், ஒரு இன்சாஸ் துப்பாக்கி, இரண்டு .303 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஜிஎல் லாஞ்சர் ஆகியவை கைப்பற்றப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கொல்லப்பட்ட ஆறு நக்ஸலைட்டுகளின் தலைக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 27 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
பஸ்தர் சரக ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் இதுகுறித்து பேசிய போது , “ஜனவரி 17-18 தேதிகளில், பஸ்தர் சரகத்தில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, ஆறு நக்ஸலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இரண்டு ஏகே 47, ஒரு இன்சாஸ் துப்பாக்கி, இரண்டு .303 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஜிஎல் லாஞ்சர் ஆகியவை மீட்கப்பட்டன. இந்த நக்ஸலைட்டுகளைக் கைது செய்வதற்கு மொத்தம் ரூ. 27 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது,” என்றார்.
ஜனவரி 18 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, மூத்த தளபதி திலீப் பெட்ஜா உட்பட நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதன் மூலம் தேசிய பூங்கா பகுதியில் நக்ஸலைட்டுகளின் இருப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா, “நான்கு நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் திலீப் பெட்ஜா என்ற பெரிய பெயர் கொண்டவர், இவர் நீண்ட காலமாக தேசிய பூங்கா பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவரை பொது நீரோட்டத்திற்குக் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இறுதியில், பாதுகாப்புப் படையினர் அவரைக் கொன்றனர். இப்போது தேசிய பூங்கா பகுதியும் கிட்டத்தட்ட நக்ஸலைட்டுகள் இல்லாத பகுதியாகிவிட்டது,” என்று கூறினார்.
தொடர் நடவடிக்கையில் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்பு
தொடர் நடவடிக்கையாக, பிஜாப்பூரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு மோதல் நடந்த இடத்திலிருந்து மேலும் இரண்டு மாவோயிசத் தளபதிகளின் உடல்களையும், தானியங்கி ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். மாவட்ட ரிசர்வ் காவலர், கோப்ரா மற்றும் சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றின் கூட்டுக்குழு, டிவிசிஎம் திலீப் பெட்ஜா மற்றும் பிற ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் வன மற்றும் மலைப் பகுதிகளில் இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



