தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தனது கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறையாக கையாள்வதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தல்களில் இருந்த சூழலைப் போலன்றி, இந்த முறை தனது கட்சிக்கான உரிய முக்கியத்துவத்தையும், கௌரவத்தையும் மீட்டெடுப்பதில் வைகோ உறுதியாக இருப்பதை இந்தக் குழுவின் அறிவிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மதிமுக தொண்டர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘தனிச் சின்னம்’ என்ற விவகாரம் இந்த முறை மேசைக்கு வரவுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டது, கட்சியின் தனித்துவத்தைப் பாதித்ததோடு சில சங்கடங்களையும் ஏற்படுத்தியதாக மதிமுகவினர் கருதுகின்றனர். எனவே, வரவிருக்கும் தேர்தலில் 12 தொகுதிகள் வரை திமுகவிடம் கோருவதோடு, கட்சிக்கு என ஒதுக்கப்பட்ட தனிச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் இந்தக் குழு உறுதியாக இருக்கும் எனத் தெரிகிறது. கட்சியின் அடையாளத்தை மீண்டும் மக்களிடம் வலுவாகக் கொண்டு செல்ல இதுவே சரியான தருணம் என வைகோ தரப்பு கணக்குப் போடுகிறது.
அர்ஜுனராஜ் தலைமையிலான இக்குழு, விரைவில் திமுக தலைமையுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது. வெறும் இடங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், எந்தெந்த தொகுதிகள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற பட்டியலையும் இக்குழு தயார் செய்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற திமுகவின் வழக்கமான அழுத்தத்திற்கு இந்த முறை மதிமுக அடிபணியுமா அல்லது தனது பிடிவாதத்தில் வெற்றி பெறுமா என்பதுதான் இப்போதைய அரசியல் எதிர்பார்ப்பு.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது தனித்துவத்தைக் காக்கப் போராடி வருகின்றன. இந்நிலையில், வைகோவின் இந்த அதிரடி நகர்வு கூட்டணிக்குள் புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. அர்ஜுனராஜ் தலைமையிலான இக்குழு, திமுகவிடம் பேசி தங்களுக்குச் சாதகமான முடிவை எட்டும் என்ற நம்பிக்கையில் மதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எது எப்படியிருப்பினும், தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக முடியும் வரை இந்த ‘மல்லுக்கட்டு’ நீடிக்கும் என்றே தெரிகிறது.



