கர்நாடக அரசு பாராசிட்டமால் பிராண்ட் உட்பட 15 மருந்துகளை தடை செய்துள்ளது. இந்த மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடாக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நேற்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் “சுகாதாரத் துறையின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் மே மாதத்தில் பல்வேறு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்தது. இந்த மாதிரிகளை சோதனை செய்த போது, 15 பொருட்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டது.
பாராசிட்டமால் பிராண்ட் போமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரைகள் ஐபி 650 மி.கி), மைசூரில் தயாரிக்கப்பட்ட ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம் மற்றும் காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஆகியவை பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக கண்டறியப்பட்ட 15 மருந்துகளில் அடங்கும். இதுகுறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பற்ற மருந்துகளை மறு அறிவிப்பு வரும் வரை பயன்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்று துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக அரசின் மருந்து சோதனை ஆய்வகம் கடந்த புதன்கிழமை, வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 14 மருந்துகளை தரமற்றவை என்று அறிவித்தது. மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, மருந்தாளுநர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் இந்த மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சேமித்து வைக்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் “ஏதேனும் இருப்பு இருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் இந்த மருந்துகளையோ அல்லது அழகுசாதனப் பொருட்களையோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளில் அல்ட்ரா லேபரேட்டரீஸ் (பேட்ச் எண்: KI124110), டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி IP (ஊசிக்கான ரிங்கர்-லாக்டேட் கரைசல்); அபான் பார்மாசூட்டிகல்ஸ் (பேட்ச் எண்: 13-4536) தயாரித்த போமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரைகள் I P 650 மி.கி) மற்றும் பயோன் தெரபியூட்டிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் MITO Q7 சிரப் (பேட்ச் எண்: CHS-40170) ஆகியவை அடங்கும். பொது சுகாதாரத்தை பாதுகாக்க இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அம்மாநில அரசு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
Read More : சைபர் கிரைம் காலர் டியூன்-க்கு பாய் பாய்.. மத்திய அரசின் அறிவிப்பால் பயனர்கள் ஹேப்பி..!!