டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) வெள்ளிக்கிழமை காலை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன கோளாறு?
அதிகாரிகள் கூறுகையில், “Automatic Message Switching System (AMSS)” எனப்படும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம். இது, விமான புறப்பாடு தொடர்பான முக்கிய தரவுகளை “Auto Track System (ATS)”க்கு அனுப்பும் முக்கிய தொழில்நுட்பம்.
இந்த கோளாறால், ATC அதிகாரிகள் தங்களது திரைகளில் விமான திட்டங்களை தானாகப் பெற முடியாமல் போனதால், இப்போது ஒவ்வொரு விமானத்திற்கும் கையால் பிளான் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே விமான போக்குவரத்தில் தாமதத்திற்கும் நெரிசலுக்கும் வழிவகுத்துள்ளது.
நிலைமை மற்றும் தாமதம்
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமாகும். தினசரி 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படும் இந்த விமான நிலையத்ஹ்டில் வியாழக்கிழமை மட்டும் 513 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை முதல் 171 விமானங்கள் தாமதமானதாக Flightradar24 இணையதளம் தெரிவித்துள்ளது.
இன்று காலை புறப்பாடுகளில் சராசரி தாமதம் 53 நிமிடங்களுக்கு சென்றுள்ளது. அதிகாலை முதல் காலை வரை புறப்பாடுகள் அதிகமாக இருப்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.. ஒரு அதிகாரி பேசிய போது, “வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் கோளாறு தொடங்கியது. தற்போது அனைத்து பணிகளும் கையால் செய்யப்படுவதால், டெல்லி ATC-யில் பெரும் குழப்பம் நிலவுகிறது,” என்று கூறினார்..
விமான நிறுவனங்களின் பதில்
IndiGo நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக விமான புறப்பாடுகள் தாமதமாகின்றன. இதனால் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் தயவுசெய்து எங்கள் இணையதளத்தில் விமான நிலையை சரிபார்க்கலாம்,” என தெரிவித்தது.
ஏர் இந்தியா நிறுவனம் வெளியிடுள்ள அறிக்கையில் “டெல்லி ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானப் பணிகள் தாமதமாகின்றன. பயணிகளிடம் ஏற்பட்டுள்ள இடையூறுக்கு வருந்துகிறோம். எங்கள் தரை ஊழியர்கள் பயணிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்,” என்று கூறியது.
AAI (Airports Authority of India) இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கவில்லை. தொழில்நுட்ப குழு பிரச்சனையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானங்கள் வழக்கமான நிலையில் இயங்க, இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



