நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செயல்படும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல வேலைக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது லெவஞ்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவருடன் சிறுமியுடன் நின்றிருந்தார். பின்னர் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியுடன் பிடிபட்ட இளைஞர், நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (26) என்பதும், தற்போது கலந்தபனை காற்றாடிவிளையில் வசித்து வருவதும் தெரியவந்தது. சிறுமியை, காதலிப்பதாக கூறி காட்டு பகுதிக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இசக்கிமுத்து மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இசக்கிமுத்து, அந்த சிறுமியின் நெருங்கிய உறவினர் என்பதும், ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.