உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, உயிரிழந்த நபர்களின் பெயரில் புழக்கத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ஆதார் எண்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகள் தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுக்கவும், தரவுத்தளத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 134 கோடிக்கும் அதிகமானோர் ஆதார் அட்டைகளை வைத்துள்ள நிலையில், இவ்வளவு பெரிய தரவுகளைக் கண்காணிப்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஒரு நபர் மரணமடைந்த இடமும், அவரது ஆதாரில் உள்ள முகவரியும் வேறாக இருக்கும்போது, தகவல்களை சரிபார்ப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இத்தகைய தொழில்நுட்ப முரண்பாடுகளை களைந்து, பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தரவுத்தளத்தை முறைப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், சாமானியர்களின் தரவுகளைப் பாதுகாக்க ‘பயோமெட்ரிக் லாக்’ (Biometric Lock) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர் அனுமதி இன்றி யாரும் கைரேகையைப் பயன்படுத்த முடியாது. மேலும், முக அங்கீகாரத்தின்போது மோசடிகளை தவிர்க்க ‘லைவ்னெஸ் டிடெக்ஷன்’ (Liveness Detection) என்ற நவீனத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது திரையில் தோன்றும் நபர் உண்மையானவரா அல்லது போலிப் புகைப்படமா என்பதை கண்டறிந்து முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், மக்களின் எண்களை அப்படியே சேமிக்காமல் ‘டேட்டா வால்ட்’ (Data Vault) எனும் மறைகுறியாக்கப்பட்ட (Encrypted) முறையில் சேமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. UIDAI அமைப்பு ஒருபோதும் தனிநபர் பயோமெட்ரிக் விவரங்களை வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்ளாது என்பதும், ஆஃப்லைன் சரிபார்ப்புகளுக்கு QR குறியீடுகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் தரவுகளை தூய்மைப்படுத்தும் பணியில் பொதுமக்களையும் இணைக்கும் வகையில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்தத் தகவலைச் சான்றிதழ்களுடன் பதிவேற்றி வீட்டிலிருந்தே ஆதாரை ரத்து செய்ய முடியும். இந்த டிஜிட்டல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், எதிர்காலத்தில் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், அரசின் நலத்திட்டங்கள் கசிவின்றி மக்களை சென்றடைய வழிவகுக்கும்.



