OpenAI நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டதற்குப் பிறகு, ChatGPT-ஐ புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறும் ஒரு இணையதளம், இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ChatGPT சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
OpenAI-க்கு ChatGPT மூலம் 90 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், Department of Defense தங்கள் ரகசிய நெட்வொர்க்கில் OpenAI-யின் AI மாடலை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது.
இந்த கணக்கீடு, இணையதளத்தில் கையெழுத்திட்டோர் எண்ணிக்கை, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் மற்றும் நம்பகமான செயலி பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ChatGPT மீது மக்கள் மெல்ல மெல்ல விரக்தி அடைந்து வருவதாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.
“அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களையும் ChatGPT-ஐ விட்டு வெளியேற ஊக்குவிக்கிறோம்,” என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும், “ChatGPT-க்கு ஒரு உதாரணம் காட்டினால், குடியேற்ற அமலாக்க அமைப்புகளுக்கு உதவுபவர்களுக்கு, அவர்களின் செயல்கள் தண்டனை இல்லாமல் போகாது என்ற தெளிவான செய்தியை அனுப்ப முடியும்” என்றும் கூறியுள்ளது.
ChatGPT-ஐ முந்திய Claude
பயன்பாட்டு தரவுகளை ஆய்வு செய்யும் Sensor Tower வெளியிட்ட தகவலின்படி, Anthropic நிறுவனம் உருவாக்கிய Claude என்ற சாட்போட், Apple App Store பட்டியலில் ChatGPT-ஐ முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், TechCrunch வெளியிட்ட செய்தியின்படி, கடந்த சனிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் ChatGPT மொபைல் செயலி uninstall செய்யப்பட்ட எண்ணிக்கை, முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 295 சதவீதம் அதிகரித்துள்ளது.
Anthropic நீக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சை
அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் AI ஒப்பந்த நிறுவனமாக இருந்த Anthropic நீக்கப்பட்ட உடனேயே OpenAI-க்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதால், ChatGPT கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. Anthropic நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Dario Amodei தலைமையிலான அந்த நிறுவனம், அமெரிக்க அரசு தங்கள் AI-யை உள்நாட்டு கண்காணிப்புக்காக பயன்படுத்த திட்டமிட்டதாகவும், அது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு எதிரானது என்றும் கூறியிருந்தது.
“அவசரமாக ஒப்பந்தம் செய்துவிட்டோம்” – சாம் ஆல்ட்மன்
இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, OpenAI தலைமை நிர்வாகி Sam Altman சமூக ஊடகத்தில் பதிவிட்டு, “வெள்ளிக்கிழமை இதை அவசரமாக வெளியிட்டிருக்கக் கூடாது. இந்த விஷயம் மிகவும் சிக்கலானது. தெளிவான விளக்கம் தேவை. நிலைமையை மோசமாகாமல் தடுக்க முயன்றோம். ஆனால் அது அவசரமும் அலட்சியமும் போல தோன்றியுள்ளது” என்று கூறினார்.
ஒப்பந்தத்தில் மாற்றம்
OpenAI தற்போது அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய உள்ளது. அதன்படி, OpenAI-யின் தொழில்நுட்பம் பொது மக்களை பெருமளவில் கண்காணிக்க (mass surveillance) பயன்படுத்தப்பட கூடாது என்றும், தேசிய பாதுகாப்பு ஏஜென்சி போன்ற பாதுகாப்புத் துறை உளவு அமைப்புகள் அதை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெளிவாக சேர்க்கப்பட உள்ளது.
இந்த விவகாரம், AI தொழில்நுட்பம், அரசுகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை ஆகியவற்றைச் சுற்றி உலகளவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Read More : 100 கி.மீ.க்கு ரூ. 260 மட்டும் செலுத்தினால் தான்..! ரூ. 6.49 லட்சத்திற்கு டாடா பஞ்ச் EV கார்..!



