ரெண்டு வருஷமா காதலிச்சு, தினமும் பார்த்து பேசி, பழகி, ஊரெல்லாம் சுற்றி, நண்பர்களிடம் காதலியாக அறிமுகமாகி, தற்போது உறவினரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலி கூறியதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் வசித்து வருபவர் ஏழுமலை. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு, 2 மகன்களும், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் – அஞ்சலை தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஈஸ்வரி (17) களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையின் மகன் சாம்ராஜ் – ஈஸ்வரி இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈஸ்வரியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததால் ஈஸ்வரி, சாம்ராஜிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், மேலும் நேற்று காலை சாம்ராஜ் மற்றும் அவனுடைய நண்பர்கள் முகேஷ், சந்தோஷ் ஆகியோர் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஈஸ்வரி, சாம்ராஜிடம் பேச விரும்பவில்லை எனவும், தனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்ததன் பேரில் சாம்ராஜ் – ஈஸ்வரி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன், சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், இரண்டு வருடங்களாக காதலித்து, ஏமாற்றிய காதலியை நினைத்து மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாம்ராஜின் தாய் செல்வராணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சாம்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஏற்கனவே சாம்ராஜ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யக் கோரி சாம்ராஜ் உறவினர்கள் களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டடனர். பின்னர் ஆரணி – திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த களம்பூர் போலீசார், வெங்கடேசனை கைது செய்வதாக உறுதியளித்தன் பேரில் சாம்ராஜின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில், தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.