மும்பையின் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான நதீம் அலிஸ். இவர், 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த அதே வேளையில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஷிஃபாவையும் காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலன் வேறொரு சிறுமியுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.
ஏற்கனவே சிறுமி ஷிஃபாவை நேரில் சந்தித்து “நதீமை விட்டு விலகு, இல்லையேல் கொன்றுவிடுவேன்” என இளம்பெண் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சிய ஷிஃபாவின் பெற்றோர், அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 6 மாத இடைவெளிக்குப் பிறகு ஷிஃபா மீண்டும் மும்பைக்கே திரும்பியுள்ளார்.
சிறுமி மீண்டும் ஊருக்குத் திரும்பிய தகவலை அறிந்த நதீம், அவரோடு மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளார். இதனால் கொதித்தெழுந்த இளம்பெண், தனது சகோதரருடன் ஷிஃபாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் ஷிஃபா மட்டும் தனியாக இருந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட இளம்பெண், மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது சகோதரர் கொண்டு வந்த நாட்டுத் துப்பாக்கியால் ஷிஃபாவின் கன்னத்திலேயே சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகளைக் கண்டு தந்தை பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார், தலைமறைவாக இருந்த இளம்பெண் மற்றும் அவரது சகோதரரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருந்த காதலன் நதீம் அலிஸை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



