மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) இணைந்து நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களில் நடத்திய அதிரடி சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 211 மருந்துகள் தரமற்றவை (Substandard) எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுகாதார துறையில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சோதனையில் கண்டறியப்பட்ட மருந்துகள் :
கடந்த மாதம் (அக்டோபர் 2025) நாடு முழுவதும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக இந்த தகவல் வெளிவந்துள்ளது. தரமற்றவை என கண்டறியப்பட்ட 211 மருந்துகளின் பட்டியலில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல முக்கிய மாத்திரைகள் உள்ளன.
* கால்சியம் மாத்திரைகள்
* வைட்டமின் டி3 மாத்திரைகள்
* வயிற்றுப் புழுக்களுக்கான மருந்துகள்
* பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்துகள்
* பாராசிட்டமால் மாத்திரைகள்
இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், சோதிக்கப்பட்ட மருந்துகளில் 5 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சி தரவுகள் :
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 349 மருந்துகள் தரமற்றவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்தில் – 143 மருந்துகள்
ஆகஸ்ட் மாதத்தில் – 94 மருந்துகள்
செப்டம்பர் மாதத்தில் – 112 மருந்துகள்
என தொடர்ச்சியாக கண்டறியப்பட்டுள்ளன. அக்டோபர் மாத சோதனையின் முடிவில் 211 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது, இது சுகாதாரத் துறையின் தர கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்த சோதனையின் முடிவுகள், பொதுமக்கள் பார்வைக்காக மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. தரமற்ற மருந்துகளை விற்பனைக்கு அனுப்பிய நிறுவனங்களிடம், மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக விளக்கம் கேட்டுள்ளது.
குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட ஒரு கோல்ட்ரிப் (Coldrip) மருந்தை உட்கொண்டதால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சோக நிகழ்வைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்தத் தரமற்ற மருந்துகளின் பட்டியல், மருந்துகள் மீதான நம்பகத்தன்மை குறித்த அதிர்வலைகளை வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய தரமற்ற மருந்துகள் சந்தையில் புழங்குவது, நாட்டின் பொது சுகாதாரத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.



