தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர்.
வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய வீட்டிற்கு கொண்டு செல்ல பொருட்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார். லாரி ஓட்டுனர் கோபி 2வது மாடியில் இருந்து பொருட்களை கீழே இறக்கிக் கொண்டிருந்தார். கோபியின் நண்பர் குமார் மற்றும் வீட்டு உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோர் இவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே மின்கம்பி சென்றுள்ளது. பீரோவை கீழே இறக்கியபோது மின்கம்பியில் உரசியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் கோபி , இலியாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். பச்சியப்பன் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சியப்பனும் உயிரிழந்தார்.
வீடு காலி செய்தபோது நடந்த துயரமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து தருமபுரிக்கு அவர்கள் விரைந்துள்ளனர்.