மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு பகுதியில் மாசுபட்ட குடிநீர் காரணமாக சுமார் 32 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதையடுத்து, நிர்வாகம் குடிநீர் மாதிரிகளைச் சோதனைக்காகச் சேகரித்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவர்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தூய்மையான நகரமான இந்தூரின் நிர்வாகம், அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி மற்றும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தூர் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) இதுகுறித்து பேசிய போது “ டாக்டர் மாதவ் பிரசாத் ஹசானி, பகீரத்புரா பகுதியைச் சேர்ந்த 32 பேர் கடந்த சில நாட்களாக நகரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைச் சந்திப்பதாகத் தனியார் மருத்துவமனைகளிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது… மாலைக்குள், சுமார் 32 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக 7-8 மருத்துவமனைகளிடமிருந்து எங்களுக்கு அறிக்கைகள் வந்தன. இதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; நோயாளிகளின் வீடுகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளோம்… 48 மணி நேரத்தில் அதன் அறிக்கை எங்களுக்குக் கிடைக்கும்… இதுவரை வயிற்றுப்போக்கு காரணமாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை,” என்று கூறினார்.
சோதனைக்கு அனுப்பப்பட்ட நீர் மாதிரிகள்
“நாங்கள் நீர் மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். சோதனை அறிக்கைகள் வந்த பின்னரே இது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியும்,” என்று இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவா கூறினார். இந்தூர் தனது நீர் தேவைகளுக்கு நர்மதா நதியைச் சார்ந்துள்ளது. அண்டை மாவட்டமான கார்கோனில் உள்ள ஜலூட்டிலிருந்து, சுமார் 80 கி.மீ தொலைவில் இருந்து, நகராட்சி அமைத்த குழாய்கள் மூலம் நகரத்திற்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.



