மலையாள சினிமாவின் பல்திறமை வாய்ந்த நடிகரான மணியன்பிள்ளை ராஜு, கடந்த ஒரு வருடமாக நாக்கின் அடிப்பகுதி கேன்சர் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதை அவர் சமீபத்தில் நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேடை நாடகங்களில் தொடங்கி, ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கிய இவர், மோகன்லால், மம்மூட்டி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள 50 வருடங்களுக்கும் மேலான சினிமா பயணத்தில் 380-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் சூப்பர் ஹிட் அடித்த மோகன்லால் நடித்த ‘துடரும்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் காது வலி, அவரது உடல் நிலையை புரிந்து கொள்ள வழிவகுத்தது. மருத்துவ பரிசோதனையின் போது அதிர்ச்சி தகவலாக நாக்கின் அடிப்பகுதியில் கேன்சர் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
முதலில் மனதளவில் கடுமையாக தாக்கத்தை எதிர்கொண்ட மணியன்பிள்ளை ராஜு, “இனி வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன்,” எனத் தன் உணர்வை பகிர்ந்துள்ளார். ஆனால், நண்பரான நடிகர் மம்மூட்டியிடம் தன் நிலையை கூறியபோது, “நீ போராடி திரும்பி வரணும்,” என அவர் சொன்ன வார்த்தைகள் தான் தன்னை சிகிச்சைக்கு தூண்டியதாக கூறுகிறார்.
மம்மூட்டியின் ஊக்கத்துடன் 5 முறை கீமோதெரபி சிகிச்சை எடுத்துள்ள இவர், தற்போது நல்ல உடல்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். அவரது இந்த மனோபலம், பலருக்கும் பெரும் ஊக்கமாக விளங்குகிறது. சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், மணியன்பிள்ளை ராஜுவின் முழுமையான உடல் நலம் திரும்ப வேண்டுமென விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.