மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் 7 வயது சிறுவனை காணவில்லை என்று அவருடைய தாத்தா கடந்த 14ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் சிறுவன் கடைசியாக அவரது தந்தையுடன் சென்றதாக கூறியுள்ளார். இதன் காரணமாக, அந்த தந்தை மீது போலீசார் சந்தேகமடைந்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தந்தையே மகனை கொலை செய்தது தெரியவந்தது. குற்றம் செய்த நபர் சசி பால் சில வருடங்களுக்கு முன் 3-வது திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த மூன்றாவது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரை அவருடைய தாய் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது அவரது மூத்த மகன் பிரதீக் (கொலை செய்யப்பட்ட சிறுவன்) அங்கே இருப்பதால் தான் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தாத்தாவுடன் தூங்கிய சிறுவனை அழைத்து வந்த தந்தை, வீட்டில் வைத்துக்கொண்டு தனது மூன்றாவது மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார். ஆனால் அவர் கணவர் மீது கோபித்துக் கொண்டு பிளாக் செய்து இருந்ததால் ரீச் ஆகவில்லை. பின் உறங்கிக் கொண்டிருந்த மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பியுள்ளார். சொந்த மகனையே தந்தை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.