நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த குளிர்கால கூட்டிட்டு தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1, 2023-ல் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சகம் தனிநபர் வருமான வரி விதிப்பை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவை 5 லட்சமாகப் புதிய வரி விதிப்புப் பிரிவில் உயர்த்துவது குறித்த விவாதிக்க துவங்கியுள்ளது. தற்போதைய வரிச் சட்டங்களின்படி, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறும் பட்சத்தில் ஒரு தனிநபர் வரி செலுத்த வேண்டும் என்பதை இந்தச் சூழலில் குறிப்பிடுவது முக்கியம். பொது விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் ஆகும்.
தனி நபர் வருமான வரி வரம்பை உயர்த்துவது மதிப்பீட்டாளர்களுக்கு வரி செலுத்துவதைக் குறைக்கும், இதனால் பொருத்தமான முதலீடுகளைச் செய்ய அவர்களிடம் பண புழக்கம் அதிகம் இருக்கும். தற்போது, மிகச் சில வரி செலுத்துவோர் மாற்று வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் பலர் பிரிவு 80C மற்றும் பிரிவு 80D போன்ற வரி விலக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பழைய தனிநபர் வருமான வரி முறையில் வரிப் பொறுப்பு குறையும்.