திருவண்ணாமலை அடுத்து மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று நான்காம் வகுப்பு பயிலும் கெடாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் மணிமேகலை தம்பதியினரின் மகள் கௌதமி சரிவர படிக்கவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியை உஷாராணி தீக்குச்சியை பற்றவைத்து கௌதமி முகத்தில் சூடு வைத்துள்ளார்.
முகத்தில் படுகாயம் அடைந்த கௌதமி பள்ளியை விட்டு வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற நிலையில் வீட்டிலிருந்த தாய் மணிமேகலை ஏன் அழுது கொண்டே வருகிற என்று கேட்ட பொழுது டீச்சர் முகத்தில் வத்திக்குச்சியை பற்ற வைத்து சூடு வைத்தார் என்று தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மானவியின் தாய் மணிமேகலை, உறவினர்களுடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை உஷாராணி இடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மானவியின் தாய் மணிமேகலை உறவினர்களுடன் மங்கலம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர், புகாரின் அடிப்படையில் மங்களம் காவல் நிலைய போலீசார் நேற்று மாலை விசாரணைக்காக தலைமை ஆசிரியை உஷாராணியை அழைத்துள்ளனர், காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது தலைமை ஆசிரியர் உஷாராணி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார், அவரை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தீக்குச்சியால் முகத்தில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி கௌதமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து முறையான சிகிச்சை அளித்து வருகின்றனர். நான்காம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கௌதமிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியை சரியாக படிக்க வில்லை என்பதற்காக முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்த சம்பவம் அரசு பள்ளி மாணவர்கள் இடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.