அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் அய்யா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் வணங்குகின்றனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர்.. அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். சுவாமி தோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது.. உன்னில் இறைவனை பார் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை ஒட்டி, மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரிகளில் பொதுத்தேர்வு நடைபெற்றால் இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் அய்யா வைகுண்டர் அவதார தினம் இருப்பதனால், அய்யா வழி பக்தர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது..