இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானில் 585-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது. மேலும், 1,326 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் உறுதியாகியுள்ளன. இது கடந்த சில ஆண்டுகளில் மத்திய கிழக்கில் நடந்த மிகப்பெரிய மனித இழப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பலியாகியுள்ளனர். எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்து இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு வெளியிட்ட தரவுகளின்படி, பலியானவர்களில் 239 பேர் பொதுமக்கள், 126 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் ஈரானில் பரவலான அச்சச்சூழல் நிலவுகிறது. மருத்துவ வசதிகள் தாழ்வான பகுதிகளில் மருத்துவமனைகள் நிரம்பி குவிந்துள்ளன, தீவிர சிகிச்சை தேவையானவர்களுக்கு வசதி இல்லை என மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர். சமாதான முயற்சிகளுக்கு இருநாடுகளும் துணை நிற்காத நிலையில், இந்த மோதல் இன்னும் எவ்வளவு தீவிரமாக மாறும் என்பதை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் இருதரப்பையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும், அதற்கான நம்பகமான முன்னேற்றம் இல்லை.
Read more: இந்தோனேசியா சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது.. இதுதான் காரணம்..