66 குழந்தைகளை காவு வாங்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்றாலும், உள்நாட்டில் விற்பனை செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்தை சாப்பிட்டு 66 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், மெய்டன் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் கலந்துள்ள வேதியல் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய அந்த மருந்தை பரிசோதனைக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ’இந்தியாவில் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளான ப்ரோமெதாஜைன் ஓரல் சொலுஷன், கோபெக்ஸ்மாலின் பேபி காப் சிரப், மேக்ஆப் பேபி காப் சிரப் மற்றும் மார்ஜின் என்கோல்ட் சிரப் ஆகியவை மோசமான தரத்தில் உள்ளன. இந்த மருந்துகள் காம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைப் பயன்படுத்தியதால், 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகளுக்கு சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ளது என எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, காம்பியா நாட்டில் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் அனுப்பியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை, ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மெய்டன் நிறுவனம் தயாரித்த மருந்துகள் குறித்தும், காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யது குறித்தும் விசாரணை நடத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, மெய்டன் நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான மருந்துகளில் டைத்தலின் கிளைகோல் அல்லது எத்திலின் க்ளைகோல் மருந்துகள் கெட்டு, விஷத்தன்மையுடையதாக மாறியதால், ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், ஹரியானா மாநிலம் சோனிபேட்டையில் நடத்தப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம், மாநில மருந்துக் கட்டுப்பாட்டு மற்றும் உற்பத்தி ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. காம்பியா நாட்டுக்கு மட்டும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது. இந்த சம்பவதத்தைத் தொடர்ந்து ஹரியானா அரசும், மெய்டன் நிறுவனத்தின் மருந்துகளை சண்டிகரில் உள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. மேலும், கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கும் அனுப்பியுள்ளது.