மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே தௌந்த் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பீமா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் கடந்த 18ஆம் தேதியன்று சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, 20, 22 ஆகிய தேதிகளில் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, மேலும் 3 குழந்தைகளின் சடலங்களையும் ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் அருகே இருந்த செல்போன் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த செல்போன் மூலமாகவே உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்தனர். விசாரணையில், மோகன் உத்தம் பவார் ( 45), அவரது மனைவி சங்கீதா (40), அவர்களது மருமகன் ஷாம்ராவ் பண்டிட் (28), மகள் ராணி (24) மற்றும் மோகனின் பேரக்குழந்தைகளான ரித்தேஷ் (7) சோட்டு (5), மற்றும் கிருஷ்ணா (3) என்று தெரியவந்தது. முதலில் உயிரிழந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவே தகவல்கள் வெளியானது.
ஆனால், 7 பேரின் மரணத்தில் மர்மம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்தாண்டு அசோக்பவார் என்பவரது மகன் தனஞ்செய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கு மோகன் மற்றும் அவரது மகன் அனில்தான் காரணம் என்று அசோக்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தனது மகனின் மரணத்திற்கு பழிவாங்க அசோக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சாமர்த்தியமாக திட்டமிட்டு எந்தவித காயமுமின்றி அவர்கள் 7 பேரையும் அசோக் கல்யாண் பவார் தனது குடும்பத்துடன் இணைந்து கொலை செய்துள்ளார். இது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, அசோக் கல்யாண் பவார் (39), ஷாம்கல்யாண் பவார் (35), ஷங்கர் கல்யாண் பவார் (37), பிரகாஷ் கல்யாண் பவார் (24) காந்தாபாய் (45) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த 7 பேர் உடலிலும் எந்தவித காயமும் இல்லாததால் போலீசாரே முதலில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நம்பியுள்ளனர். சிறு காயம் கூட இல்லாமல் அவர்களை கொலை செய்தது எப்படி? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் மரணத்திற்காக 3 குழந்தைகள் உள்பட 7 பேரை கொலை செய்த சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.