பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மங்கிடனாவோ என்ற மாகாணத்தில் 67 பேர் பலியானதாக தேசிய பேரிடர் குழு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சின் மிக முக்கியமான மத்திய பகுதியான விசயாஸ் மகாணத்திலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
நிலச்சரிவில் சிக்கி 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் மாயமாகியுள்ளனர். நால்கே என்ற புயல் புரட்டி எடுத்துள்ள நிலையில் அங்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மாகாணத்தில் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புயல் கோரத்தாண்டவமாடியநிலையில் தொடர்ந்து மழை , புயல் , வீசி வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கனமழைக்கு பல வீடுகள் சரிந்ததால்மக்கள் தங்குமிடமின்றி தவிக்கின்றர்.
நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்கள், வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை அந்நாட்டு பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். ராணுவஅதிகாரிகளும்பல்வேறு பகுதிகளில் பணியில் களம் இறங்கி உள்ளனர். இதுவரை 5,000 பேரை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.