திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை அடுத்த தண்டகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தீபக் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தீபக், மதிய உணவு இடைவேளையின்போது தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூக்கில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி விழவே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை வழியாகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டா. இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகனின் மரணத்தில் பெரும் சந்தேகம் இருப்பதாக அவனது தந்தை முரளி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் அவர் கண்ணீருடன் கூறுகையில், “காலை பள்ளிக்குச் செல்லும்போது மகிழ்ச்சியாகவே சென்றான். ஆனால் மதியம் திடீரென அவனுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் தந்தனர். அரசு மருத்துவமனையில் எனது மனைவி மட்டும் மகனை பார்க்க அனுமதிக்கப்பட்டபோது, அவன் முகம் மற்றும் தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாக கூறுகிறார். பள்ளித் தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறுகின்றனர். வசதி இல்லாததால் அரசுப் பள்ளியில் சேர்த்தேன், ஆனால் என் மகனைப் பிணமாக தான் பார்க்க முடிகிறது” என வேதனையுடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துத் திருப்பூர் மாவட்டக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மாணவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.



