ஈரானின் பி1 பாலம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் 8 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கராஜ் பகுதியில் உள்ள “B1 பாலம்” மீது நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையால், சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலின் போது அருகில் இருந்த பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நேரத்தில் அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல்களை “தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு” எனக் குறிப்பிட்ட ஈரான், தனது பாதுகாப்பை காக்க அனைத்து திறன்களையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் நடந்த தொலைபேசி உரையாடலிலும் அவர் இதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே தாக்குதல்கள் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதல்களில் முக்கிய தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்ததாகவும் ஈரான் குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதாக அஜர்பைஜான் அதிபர் எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளும் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசியுள்ளனர். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டவை என வலியுறுத்தியுள்ளார். இந்த மோதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈரானிய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Read more: தவெக தலைவர் விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்!



