ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பதை அறிந்தனர்.
இது குறித்து மதுபான கடைகளை நடத்தி வருபவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அளித்த பதிலைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, அந்த பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மதுபானம் அனைத்தையும் குடித்து விட்டன எனத் தெரிவித்தனர். இதை நம்பாத அதிகாரிகள் மதுபானம் விற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
இவ்வாறு ஊழலுக்கு எலிகள் மீது குற்றம்சாட்டப்படுவது ஜார்க்கண்டில் இது முதல்முறை அல்ல. போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை. அவற்றை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.