ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் கடும் சரிவைக் கண்ட நிலையில் ரூ. 19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது, ரூ. 11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இதற்கிடையே, அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள ரூ. 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் ரூ.80,000 கோடி ஆகும். அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகையான ரூ.2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ. அளித்த கடன் தொகை மட்டுமே. 21,375 கோடி ஆகும். இண்டஸ்இண்ட் வங்கி ரூ.14,500 கோடியை அதானி குழுமத்துக்கு கடனாக அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளது.