Tuesday Worship: செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும். செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய கிழமை, செவ்வாய்கிழமை ஆகும். கிழமை என்றால் உரிமை என்று பொருள். செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்கிழமை என குறிப்பிடுகிறோம். முருகுப் பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன. செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப் பெருமான் என்பதால் செவ்வாய் கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
இதனால் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து, அவருக்குரிய அதி தேவதையான முருகப் பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும்.
6 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அதனை அகற்றி விட்டு. ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வையுங்கள். ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும். அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். ஆறு வெற்றிலைகளிலும் படும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப் பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி முறையிடுங்கள். இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும்.
செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும். பின்னர் வீட்டுக்கு திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த விரதத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால், செவ்வாய் தோஷத்தினால், ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும்.