நெல்லையைச் சேர்ந்த இளைஞர் விஜய், கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், விஜய் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்றபோது, அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் உறவில் இருந்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாகக் கூறி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்காக முன்னதாக வந்தபோது, நீதிமன்றம் “சம்மதத்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட உறவுகளை பின்னர் குற்றவியல் வழக்காக மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது; இது தவறான முன்னுதாரணம்” எனக் கடுமையாக கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி புகழேந்தி, இருவரும் ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஒரே சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளனர் என்றும், அந்தகாலத்தில் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை அறிந்திருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவில் ஈடுபட்டு நீண்ட காலத்திற்கு உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடும்போது, அந்த உறவின் அடுத்தடுத்த முறிவு ஏற்பட்ட பின் குற்றவியல் சட்டத்தினை பயன் படுத்துவது தவறு.
இந்த வழக்கில் “ இளைஞர் திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று திருமணத்திற்கு முன்பான உறவுகள் சமூகத்தில் பரவலாகிவிட்ட சூழலில், நீண்டகால உறவு முறிந்துவிட்டதற்காக குற்றவியல் சட்டத்தை ஆயுதமாக மாற்றுவது துஷ்பிரயோகம்,” என நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.
மேலும் அவர், “தனிப்பட்ட உறவுகளை ஒழுக்கப்படுத்த சட்டத்துக்கு அதிகாரம் இல்லை. வற்புறுத்தல், ஏமாற்றம், சம்மதத்தை பாதிக்கும் சூழல்கள் ஏற்பட்டால்தான் சட்டம் தலையிட முடியும். உணர்ச்சி ரீதியான தகராறுகளை குற்றவியல் வழக்காக மாற்ற முடியாது” எனத் தெளிவுபடுத்தினார். இதனையடுத்து, தேவா விஜய் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read more: ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு..!! தவெகவினர் அதிர்ச்சி..!! என்ன காரணம்..?



