Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது..
லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் போலவே சிந்தித்து செயல்படும் AI, 2027-ஆம் ஆண்டிலேயே உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
AGI வந்தால் மனித வேலைகளுக்கு முடிவு?
சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் உரையாடிய டாக்டர் யாம்போல்ஸ்கி, AGI உருவானால், அது மனிதர்கள் செய்யும் அனைத்து அறிவுசார் பணிகளையும் மனிதர்களை விட சிறப்பாக செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறினார்.
இதன் விளைவாக, அடுத்த 5 ஆண்டுகளில் 99% வேலைகள் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார். இதுவரை தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களுக்கு உதவியாக இருந்தன. ஆனால், இன்றைய AI மனிதர்களை சாராமல், தனித்துவமாக செயல்படும் நிலைக்குச் செல்கிறது என்றும் அவர் கூறினார்.
எந்த வேலையும் பாதுகாப்பானதாக இல்லை
AI பாதுகாப்பு மற்றும் ஆபத்துகள் குறித்து 100-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ள டாக்டர் யாம்போல்ஸ்கி, “தானியங்கி முறையில் செய்ய முடியாத தொழில் என்றே இல்லை” என்று கூறினார். முதலில், கணினி சார்ந்த வேலைகள் (IT, கணக்கியல், தரவு பகுப்பாய்வு, அலுவலகப் பணிகள்) பாதிக்கப்படும். அதன்பின், மனித வடிவ ரோபோட்டுகள் (Humanoid Robots) வளர்ச்சியடைந்தால், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளும் பாதிக்கப்படும். 2030-க்குள், பெரும்பாலான உடல் உழைப்பையும் இயந்திரங்கள் செய்யக்கூடிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்தார்.
பெரும் அளவிலான வேலை இழப்பு
“10% வேலைவாய்ப்பு இல்லாத நிலை கூட பயமுறுத்தும் ஒன்று. ஆனால் AI காரணமாக 99% வரை வேலை இழப்பு ஏற்படலாம்” என்று அவர் தெரிவித்தார். இன்றே இருக்கும் AI மாதிரிகளே, சுமார் 60% வேலைகளை மாற்றும் திறன் கொண்டவை என்றும் அவர் கூறினார். மேலும், பல வேலைகள் “தேவையற்றவை” (Unnecessary jobs) என அவர் குறிப்பிட்டார். முழுமையான தானியக்கம் இல்லாமல்கூட, இத்தகைய வேலைகள் மறைந்து போகலாம் என்றும் அவர் கூறினார்.
மறுபயிற்சி தீர்வாகாது?
AI காரணமாக வேலை இழந்தவர்களை மறுபயிற்சி (Reskilling / Retraining) மூலம் புதிய வேலைகளுக்கு மாற்றலாம் என்ற கருத்தில், டாக்டர் யாம்போல்ஸ்கி அவர் சந்தேகம் தெரிவித்தார்.. AGI மனிதர்கள் செய்யும் அனைத்தையும் செய்யத் தொடங்கினால், மாற்று தொழில்களே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
AGI-க்கு பின் சூப்பர் புத்திசாலி AI உருவாகும்
2027-க்குள் AGI உருவாகும் என்ற அவரது கணிப்பு, AI தொடர்பான முன்னறிவிப்பு சந்தைகள் (Prediction Markets) மற்றும் பெரிய AI நிறுவன தலைவர்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என அவர் விளக்கினார். AGI உருவான பின், மனிதர்களை விட பல மடங்கு புத்திசாலியான Superintelligent AI உருவாகும் அபாயமும் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
படைப்பாற்றல் வேலைகளும் தப்பாது
AI ஊடகத் தயாரிப்பு, செய்தி எழுதுதல், உள்ளடக்க உருவாக்கம், பாட்காஸ்டிங் போன்ற படைப்பாற்றல் துறைகளிலும் மனிதர்களை விட சிறப்பாக செயல்படும் என அவர் கூறினார். AI வேகமாகவும், அதிக துல்லியத்துடனும், பெரும் அளவிலான தகவல்களை பயன்படுத்தி வேலை செய்ய முடியும் என்பதே இதற்குக் காரணம்.
எதிர்காலத்தில் மீதமிருக்கும் 5 வேலைகள்
இந்த இருண்ட எதிர்காலத்திலும், சில வேலைகள் மட்டும் தொடரலாம் என டாக்டர் யாம்போல்ஸ்கி குறிப்பிட்டார்:
பணக்காரர்களுக்கான தனிப்பட்ட சேவைகள்
செல்வந்தர்கள், AI இருந்தாலும் மனித கணக்காளர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள் போன்றவர்களை விரும்பலாம்.
உணர்ச்சி சார்ந்த வேலைகள்
நம்பிக்கை, அனுதாபம், மனித உறவு அவசியமான சில ஆலோசனை அல்லது சிகிச்சை பணிகள் தொடரலாம். ஆனால் வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
AI கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு
AI பாதுகாப்பு, நெறிமுறை, ஒழுங்குமுறை தொடர்பான கண்காணிப்பு பணிகள் தேவைப்படும்.
AI விளக்குநர்கள் மற்றும் இடைநிலையாளர்கள்
AI-யை புரிந்து கொண்டு, நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் அதை பயன்படுத்த உதவும் நிபுணர்கள் தேவைப்படலாம்.
Prompt Engineers மற்றும் AI கையாளுநர்கள்
தொடக்க காலத்தில் இந்த வேலைகள் இருக்கும். ஆனால் AI மேலும் சுயமாக செயல்படத் தொடங்கினால், இந்த வேலைகளும் குறையும்.
உலகளாவிய அடிப்படை வருமானம் அவசியம்
AI அதிக உற்பத்தி திறன் மற்றும் வளங்களை உருவாக்கும் என்பதால்,
மக்களுக்கு வேலை இல்லாவிட்டாலும் வாழ்வாதார உதவி வழங்கும் உலகளாவிய அடிப்படை வருமானம் Universal Basic Income (UBI) போன்ற அமைப்புகள் அவசியமாகலாம் என அவர் கூறினார். ஆனால், இன்றைய சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் இத்தகைய மாற்றத்திற்கு தயாராக இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
இளைஞர்கள் மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு பெரிய சவால்
இளைஞர்கள் அதிகமாக உள்ள, வேலைவாய்ப்பு சவால்களை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் நாடுகளுக்கு, இந்த எச்சரிக்கை மிக முக்கியமானது. AI வேலை இழப்பு கணிக்கப்பட்ட வேகத்தில் நடந்தால், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம். பல நிபுணர்கள் அரசுகள் உடனடியாக கொள்கை திட்டமிடல் மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என கூறினாலும், மறுபயிற்சி மட்டும் போதாது என டாக்டர் யாம்போல்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
Read More : இனி பிஎஃப் பணத்தை ஈசியா எடுக்கலாம்..!! புதிய செயலியை அறிமுகம் செய்யும் மத்திய அரசு..!!



