இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிவாயுவுக்கு நகர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் எரிவாயுக்களில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் நவீன திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ”மாற்று எரிசக்தியை நோக்கி நாடு பயணித்து வரும் சூழலில், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்க வாய்ப்புகள் இல்லை. விதர்பா பகுதியில் பயன்படுத்தப்படும் பயோ எத்தனால் மூலம் வாகனத்திற்கான எரிவாயுவை தயாரிக்கலாம். மேலும், ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்க முடியும். இத்தனை நாள் உணவு தயாரித்து வழங்கி வந்த விவசாயிகள் இனி எரி சக்தியையும் தயாரித்து வழங்கும் காலம் உருவாகியுள்ளது என்றார்.
மேலும், நாட்டில் மாற்று எரிசக்திகளின் பயன்பாட்டில் முன்னுதாரணமாக மகாராஷ்டிரா விளங்க வாய்ப்புள்ளது. எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.115ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை ரூ.64 இருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20% எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.