தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்தார்.. மேலும் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “ தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால், தமிழகத்திற்கு மத்திய அரசின் மானியம் தரமாட்டோம் என்றும் மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என்றும் மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்கிறது. அதாவது, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டும்..
மாதம் 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது..
ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது..” என்று தெரிவித்தார்..
தமிழகத்தில் பேருந்து கட்டணம், மின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..