விருத்தாசலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்த கோபி என்பவரின் 17 வயது மகள் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படித்துவந்தார். இந்நிலையில், இவர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
![பெற்றோர் பேசாததால் பிளஸ்2 மாணவி விபரீத முடிவு..! கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Death-e1652873062663.jpg)
அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாணவி சரியாக படிக்கவில்லை எனவும், இதனால் தனது பெற்றோர்கள் பேசாததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால் போலீசார் அவரது இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சரியாக படிக்காத காரணத்தால் பெற்றோர்கள் முகம் கொடுத்து பேசுவதில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.