நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறுகையில், இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72,062 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59,55,873 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4.23 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4.83 கோடி ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது. நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில், அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன”. இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை அமைச்சர் அஜய்பட் கூறுகையில், ”மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை. இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.