சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, துணை மேயர் மகேஷ்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதுமே மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். குறிப்பாக, மழைநீர் கால்வாய் அமைப்பதில் பணி மந்தமாக நடப்பதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி அளித்த பதிலில், “மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க முதலமைச்சர் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை பார்வையிட நியமித்து உள்ளார். இந்த அதிகாரிகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்து வருகின்றனர். மழை நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழை வெள்ள பாதிப்புக்குள்ளாகும் மிக முக்கிய இடங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பின்னர் திமுக கவுன்சிலர் தனசேகரன் பேசும் போது, ”எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாநகராட்சி கூட்டத்தில் பார்வையாளர்களாக வரலாம். அவர்கள் பேச அனுமதி உள்ளதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு மேயர் பிரியா, “அவர்களும் மக்கள் பிரதிநிதி. எனவே மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்சனை பற்றி பேச உரிமை வழங்கப்பட்டுள்ளது” என்றார். கவுன்சிலர் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், “மாநகராட்சி தெருக்களில் உள்ள தெரு விளக்கு மின் கம்பங்கள் வழியாக சாலையின் குறுக்கே இண்டர்நெட் வயர்கள் தாறுமாறாக தொங்கிக் கொண்டு உள்ளது. இதனை தனியாக மேலே உயரத்தில் பைப் லைன் வாயிலாகவும், பூமிக்கு அடியிலும் சீராக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ”சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்க கல்வி நிலை குழு, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் முடிவெடுக்கும். கடந்த மழையின் போது தி.நகர் வெள்ள பாதிப்புக்கு மாம்பலம் கால்வாய் முக்கிய காரணமாக இருந்தது. இந்த கால்வாயை மிக பிரமாண்டமாக சீர்படுத்தி கரையோர நடைபாதை பூங்கா, அழகுப்படுத்தும் திட்டம் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்படுகிறது. காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையத்தை சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 4 இடத்திலும் அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்குவது உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன”.