திண்டுக்கல்லில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சாலை ரோட்டில் தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் பணம் எடுக்கும்போது, ஏடிஎம் மெஷின்களிலிருந்து கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ரோட்டில் இருக்கும் ஒரு வங்கி ஏடிஎம் மையத்தில் நான்கு மெஷின்கள் இருக்கின்றன. இதில், ஒரு மெஷினில் இரவு 9 மணிக்கு பணம் எடுத்த ஒருவருக்கு கிழிந்த 500 ரூபாய் நோட்டு வந்துள்ளது. அதை பார்த்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மறுநாள் காலை அந்த வங்கிக்கு சென்று உதவி மேனேஜரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், திங்கள்கிழமை வாருங்கள் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புபவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் தருவோம், என பதில் சொல்லியுள்ளார்.
இதை கேட்ட, வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகள், வங்கி ஏடிஎம் மெஷின்களில் வந்தால், அதை மாற்றிக் கொடுக்க வங்கி நிர்வாகம் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.