அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வி உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது..
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்..
இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவோர் இந்த திட்டத்தில் பயனடையலாம்.. இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கடந்த 10-ம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.. அதன்படி இத்திட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.. இந்த கோரிக்கையை ஏற்று, உயர்கல்வித்துறை தற்போது 2 நாட்கள் கால அவகாசம் வழங்கி உள்ளது.. எனவே மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவகையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும் என்றும், திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..