கருமுட்டை வழக்கு தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனையின் பதிவை ரத்து செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக திருப்தி அடைந்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள்
இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், பொதுநலன் கருதி விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடமுள்ளது எனவும், அதன் அடிப்படையிலேயே சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை எனவும், சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டியதில்லை என்ற போதும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவில், விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூற முடியாது என தெரிவித்துள்ளனர். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனிநீதிபதி புறக்கணித்திருக்கக் கூடாது எனக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு , மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.