பொது சேவை மையத்துக்கு அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க சென்ற பெண் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சித்ரவதை அனுபவித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க அந்த கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் காத்திருக்குமாறு அப்பெண்ணிடம் கணினி ஆப்பரேட்டர் கூறியுள்ளார். இதனால், அந்த அறையில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், கடை உரிமையாளர் உள்பட 4 பேர் அந்த பெண்ணை பொது சேவை மையத்தில் வைத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பலாத்காரம் செய்ததை அந்த 4 கொடூரன்களும் வீடியோவாக எடுத்து அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே 28ஆம் தேதியே நடந்துள்ளது. வீடியோ எடுத்து வைத்துள்ளதால், இதுபற்றி வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் பாலியல் வன்கொடுமை வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒரு கொடூரனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரில், முக்கிய குற்றவாளியும், பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக படித்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.