அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமானந்தல் அடுத்த தொட்டிமடுவு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் விடுதியில் இருந்த கேபிள் வயரில் கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
![விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..! வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..! போலீசார் குவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/index-3.jpg)
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி மாணவனின் தந்தை ஆனந்தன் ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சுமித்ரா உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விடுதி வார்டன், சக மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.