கீழச்சேரி பள்ளி மாணவி மரண விவகாரத்தில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள், ஒரே நாளில் மாற்றுச்சான்றிதழ் பெற்று சொந்த ஊர் திரும்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களை தொடர்ந்து, மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவியுடன் விடுதியில் தங்கி படித்த 23 மாணவிகள், பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி சொந்த ஊருக்கு சென்றனர். பெற்றோர் சம்மதத்துடனே மாற்றுச்சான்றிதழ் மாவட்ட கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் வகையில், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.