தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, இந்த அகவிலைப்படி உயர்வு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இதனை தெளிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ”கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31% இல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழக அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.