காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால், அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் நாராயணசாமி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த தினேஷ் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, மாநில தலைவர் வாகனத்தில் ஏறி புறப்பட முயன்ற அவரை, சொந்த கட்சியினரே போகவிடாமல் தடுத்தனர். மேலும், தினேஷ் குண்டுராவ் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கிருந்தவர்களை கலைந்துபோக வைத்தனர்.