வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தோல் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் பிரபலமாக செயல்பட்டு வரும் ஃபரிதா மற்றும் கே.ஹெச் ஆகிய 2 குழுமங்களுக்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மையப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட்’ குழுமத்துக்குச் சொந்தமாக தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 10-க்கும் அதிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் மட்டுமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சுமார் 25 வாகனங்கள் வந்த வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் ஆம்பூர் பகுதியிலுள்ள ஃபரிதா குழுமத் தொழிற்சாலைகளில் சோதனையில் இறங்கினர்.
![மொத்தம் 60 இடங்கள்..! வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய தோல் தொழிற்சாலைகள்..! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-23-at-12.28.36-PM1.jpeg)
அதேபோல, வேலூர் அருகேயுள்ள பெருமுகைப் பகுதியிலிருக்கும் ‘கே.ஹெச். எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (கிளவ் டிவிஷன்)’ குழுமத்துக்குச் சொந்தமான கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 2 குழுமங்களுக்கும் சொந்தமான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூந்தமல்லி, பெரியமேடு, ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலுள்ள அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-23-at-12.28.37-PM-e1661238011666.jpeg)
ஃபரிதா மற்றும் கே.ஹெச் குழுமங்கள் ஆசியா, ஐரோப்பிய ஒன்றியங்கள், ஆப்பிரிக்க நாடுகளிலும் தொழில் முதலீடு செய்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.