ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.
![”பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு”..! - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Minister-Ragupathi-DMK.jpg)
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்றச்செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
![”பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு”..! - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Jayalalitha.jpeg)
ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுத்த பின்னர் அதன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார். போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.