ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர்களுக்கு தனியாக பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது ஆதிதிராவிடத்துறை அமைச்சர் “ 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க வாய்ப்புள்ள மாவட்டங்களில், தலா 5௦ உறுப்பினர்களைக் கொண்ட 40 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்படும்.
அச்சங்கங்களுக்குத் தேவைப்படும் பால் குவளைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்படும்..” என்று அறிவித்திருந்தார்..
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அதிக அளவில் கறவைமாடு வளர்ப்புத் தொழிலை நம்பியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர்களுக்கு தனியாக பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரம் மேன்மை அடையும் வகையில், முதற்கட்டமாக 1800 ஆதிதிராவிட மகளிர் பயனடைய ஏதுவாக ரூ.36 லட்சம் SCA to SCSP நிதியிலிருந்து மேற்கொள்ள நிர்வாக அனுமதியும், 200 பழங்குடியினர் மகளிர் பயனடைய ரூ.4 லட்சம் மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கியும், 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..